கிடப்பில் போடப்பட்ட புறவழிச் சாலை திட்டம்!
திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகர் புறவழிச் சாலை திட்டம் நில ஆர்ஜிதம் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகர் புறவழிச் சாலை திட்டம் நில ஆர்ஜிதம் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
விளை நிலங்கள் யாவும் மனைப்பிரிவுகளாக உருவாகி வரும் இந்த காலக்கட்டத்தில் மற்ற நகரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் கடலூர் ஓரளவுதான் விரிவடைந்துள்ளது.
இதற்கு காரணம் நகரின் கிழக்கே கடலும், வடக்கே புதுச்சேரி மாநிலமும், தெற்கே மாசுபட்ட சிப்காட் வளாகமும் அமைந்திருக்கிறது.
Advertisement
அதனால் கடலூர் வளர்ச்சி என்றாலே மேற்கு திசையில் மட்டும்தான் 30-க்கும் மேற்பட்ட புதிய நகர்கள் உருவாகியுள்ளன.
பழைய மற்றும் புதிய நகர்களில் இருந்து மக்கள் கடைவீதி வழியாகத்தான் லாரன்ஸ்ரோடு, பஸ் நிலையத்துக்கு வர வேண்டும்.
அதனால் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோடு முதல் கூத்தப்பாக்கம் வரை அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஆகும் இடமாக உள்ளது.
திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட்டில் வாகன நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடலூர் நகராட்சி விரிவு அபிவிருத்தி திட்டத்தில் வண்டிப்பாளையம் சாலையில் இருந்து பாதிரிக்குப்பம் கன்னிமா நகர் வரை பொது சாலை அவசியம் என கடந்த 1990-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது.
இப்பகுதியில் உருவாகியுள்ள பல்வேறு நகர்களில் இருந்து சாலைகள் அமைத்து திருவந்திபுரம் சாலையோடு இணைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் வாகன நெரிசல் குறைந்தபாடில்லை.
பிரசித்திப் பெற்ற திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் நடைபெறும் திருமண வைபவ நேரத்தில் இந்த சாலை முழுவதும் வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. எனவே கடலூர் - திருவந்திபுரம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சரவணா நகர் வழியாக செல்லும் புறவழிச் சாலையைத் துரிதப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
அதற்காக சரவணா நகர் பகுதியில் உள்ள 31 ஆயிரத்து 760 சதுர அடி நிலத்தை நகராட்சியால் தனியாரிடமிருந்து நில ஆர்ஜிதம் செய்ய வேண்டியுள்ளது.
அதற்காக அந்த நிலத்துக்கு முதல் கட்டமாக மாவட்ட வருவாய் அலுவலரால் சதுர அடி விலை ரூ.43 நிர்ணயம் செய்து நகராட்சி நிர்வாக ஆணையரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
வழிகாட்டி மதிப்பை விட கூடுதலாக இருப்பதாகக் கூறி 2 முறை அந்த கோப்பு திருப்பி அனுப்பப்பட்டது.
தற்போது வழிகாட்டி மதிப்பு 3 மடங்காக உயர்ந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் நில மதிப்பை நேரடியாக ஆய்வு செய்து நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியதன்பேரில் ஆட்சியர் கிர்லோஷ்குமார் 6 மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது வழிகாட்டி மதிப்பு சதுர அடி விலை ரூ.510-ஆக உயர்ந்து விட்ட நிலையிலும் தனியார் இடத்தை சதுர அடி ரூ.130-க்கு குறைத்து அரசுக்கு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்த தருணத்தை அரசு பயன்படுத்திக் கொண்டு எதிர்காலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கணக்கில்கொண்டு உடனடியாக சரவணா நகர் புறவழிச் சாலையை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது கடலூர் நகர மக்களின் எதிர்பார்ப்பு.