புகார்கள், குறைகள் தெரிவிக்கும் மக்களுக்கு இரண்டு மாதங்களில் பதிலளிக்க வேண்டும்
புகார்கள் மற்றும் குறைகளைத் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு அதற்கான தீர்வு அல்லது இறுதி பதிலை இரண்டு மாதங்களுக்குள் அளிக்க வேண்டும் என்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
புகார்கள் மற்றும் குறைகளைத் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு அதற்கான தீர்வு அல்லது இறுதி பதிலை இரண்டு மாதங்களுக்குள் அளிக்க வேண்டும் என்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தீர்வு காண இரண்டு மாதங்களுக்கு மேல் நீட்டித்தால் பொது மக்கள் அளித்த புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து இடைக்காலமாக ஒரு பதிலை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் தங்களின் தனிப்பட்ட பிரச்னை அல்லது பொதுப் பிரச்னை குறித்து மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகங்கள் உள்பட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனுக்களாக எழுதி அளிக்கின்றனர். இவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது எத்தகைய காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசு புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் பிறப்பித்துள்ளார். அதன் விவரங்கள் வருமாறு:
இணையதளத்தில் பதில் கிடைக்கும்: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இணையதள இணைப்பு கட்டாயம் இருக்க வேண்டும். இதற்கு ஏற்றாற் போன்று அனைத்து அலுவலகங்களுக்கும் இணையதள இணைப்பு வழங்கப்படும். மேலும், மின்னஞ்சல் (இ-மெயில்) வழியாகப் பெறப்படும் புகார்கள் மற்றும் குறைகளுக்கான மனுக்கள் மீதும் பதிலளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பொது மக்களின் புகார்கள் அல்லது குறைகளுக்கு தீர்வு காண மனுக்களை அளித்தால் அந்த மனுக்களை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டினை மூன்று நாள்களுக்குள் அரசு அலுவலகங்கள் அளிக்க வேண்டும். அதாவது, மனுக்கள் கிடைக்கப் பெற்ற தினத்தில் இருந்து 3 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட வேண்டும்.
மனுக்கள் வழங்கப்பட்ட தினத்தில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். பொது மக்கள் தங்களது புகார்கள் அல்லது குறைகள் குறித்து எந்த அரசு அலுவலகத்தில் மனு அளித்தாரோ அந்த அலுவலகத்துக்குச் சென்று மனுவின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டு அறியலாம். அதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய பதிலளிக்க வேண்டும்.
புகார் மனு அளிக்கப்பட்டு அதற்குத் தீர்வு காண இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும் பட்சத்தில், மனுவின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து ஒரு இடைக்கால பதிலை மனுதாரருக்கு அளிக்க வேண்டும். மேலும், மனுதாரர் அளித்த புகார் மனுவின் மீது போதுமான நடவடிக்கை எடுக்க சாத்தியக்கூறுகள் இல்லாமல் இருந்தால் அதற்கான தகுந்த காரணத்தை இரண்டு மாதங்களுக்குள் மனுதாரருக்கு அளிக்க வேண்டும்.
அரசு கையேட்டில் திருத்தம்: பொது மக்களின் புகார் மனுக்கள் மீது இரண்டு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இந்த முக்கியமான உத்தரவு குறித்து, தமிழக அரசின் கையேடு மற்றும் தலைமைச் செயலக அலுவலக கையேடு ஆகியவற்றில் உரிய முறையில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.