நெல்லை அருகே வீரவநல்லூரில் விலையில்லா பொருட்கள் வழங்குவதில் குளறுபடி: பொதுமக்கள் அலைக்கழிப்பு
வீரவநல்லூரில் விலையில்லா பொருட்கள் பயனாளிகளுக்கு அறிவிக்கப்பட்ட வார்டு்க்கு வழங்காமல் கிராம நிர்வாக அலுவலர் தன்னிச்சையாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால்
வீரவநல்லூரில் விலையில்லா பொருட்கள் பயனாளிகளுக்கு அறிவிக்கப்பட்ட வார்டு்க்கு வழங்காமல் கிராம நிர்வாக அலுவலர் தன்னிச்சையாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வெள்ளிக்கிழமை பேரூராட்சி உறுப்பினர் வீட்டை முற்றுகையிட்டனர்.
வீரவநல்லூர் தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகளில் 5,800 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜூலை 29 ஆம் தேதி இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ. விலையில்லா பொருட்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.
பயனாளிகளுக்கு வார்டு வாரியாக டோக்கன் வழங்கப்பட்டு விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் என வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி வியாழக்கிழமை பொதுமக்கள் நயினார்காலனியில் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் மையத்தில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர். எனினும் அறிவிக்கப்பட்ட வார்டு பயனாளிக்கு பொருட்கள் வழங்காமல் வேறு வார்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதாம்.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலரின் நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனிடையே வெள்ளிக்கிழமை பேரூராட்சி 10 ஆவது வார்டு பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் மையத்தில் திரண்டனர். ஆனால் அறிவிக்கப்பட்ட வார்டு பயனாளிகளுக்கு டோக்கன் வழங்காததால்
மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பேரூராட்சித் தலைவர், உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்காமல், விலையில்லா பொருட்கள் வழங்குவதில் கிராம நிர்வாக அலுவலர் தன்னிச்சையாகவும், மக்கள் பிரதிநிதிகளுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
நிர்வாக அலுவலரை கண்டித்து நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வீரவநல்லூரில் தட்டிப்போர்டு வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேரூராட்சித் தலைவர் எஸ்.கே. பழனிச்சாமி கூறியதாவது: பேரூராட்சித் தலைவர், உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்காமல் நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் கிராம நிர்வாக அலுவலர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். இது குறித்து வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.