நெல்லையில் 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 5 மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் தர்னா
காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும், ஊதியம் உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி,
காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும், ஊதியம் உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமனாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்கள் திங்கள்கிழமை பாளையங்கோட்டையில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு நி்ர்வாகத்தின் அச்சாணியாக திகழும் வருவாய்த்துறையில் சமூக பாதுகாப்புத் திட்டம், பொதுவிநியோகத் திட்டம், நிலப்பட்டா, நில ஆக்கிரமிப்பு அகற்றுதல், தினமும் நிகழும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், விலையில்லாப் பொருட்கள் வழங்குதல், தகவல் அறியும் உரிமைச் சட்டம், நீதிமன்ற நடவடிக்கைகள், பிற்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிட நலத்துறை, நிலச்சீர்திருத்தம், நகர நிலவரித்திட்டம் உள்ளிட்ட 110 க்கும் மேற்பட்ட இனங்களில் 5,000 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன.
காலி பணியிடங்களால் விடுமுறை தினம், பண்டிகை நாட்கள், குடும்ப விழாக்களை தவிர்த்து அனைத்து தினங்களிலும் பணி செய்யும் நிலை உள்ளது. ஆகவே காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
வட்டாட்சியர் மற்றும் அனைத்து வருவாய் உதவியாளர்களுக்கும் அடிப்படை ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளின் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திங்கள்கிழமை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமனாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்ற தர்னா போராட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் நூறறாண்டு மண்டபம் அருகில் நடைபெற்ற இந்த தர்னா போராட்டத்துக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க திருநெல்வேலி மாவட்டத் தலைவர் மூ. குருச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர்கள் வெ. கண்ணன் (குமரி), ஆர். ஜெகநாதன் (தூத்துக்குடி), ஆர். ராமனாதன் (விருதுநகர்),ஏ. மனுவேல்அருள்ராஜ் (ராமனாதபுரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலர் என். குமாரவேல் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அமைப்பின் முன்னாள் மாநில பொதுச்செயலர் கே. ராஜ்குமார், முன்னாள் மாநில துணைத் தலைவர் எம். முத்துமுகம்மது, முன்னாள் மாநிலச் செயலர் கன. முருகானந்தம், மாவட்டச் செயலர் மு. சுப்பு, பொருளாளர் எஸ்.பி.எம். முகம்மதுபுகாரி உள்பட 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.