முகப்பு
தமிழ்நாடு

தினமணி செய்தி எதிரொலி: பாரதியார் பல்கலை. இணையதளத்தில் இருந்து எம்.எட். படிப்பு பிரமாணப் பத்திர தகவல் நீக்கம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகம் எம்.எட். படிப்பு தொடங்குவதற்காக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் (என்.சி.டி.இ.) தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் போலியானது என்ற சர்ச்சை கிளம்பியதைத் தொடர்ந்து, அது குறித்த செய்தி தினமணி நாளிதழில் (ஜூன் 7) வெளியானது.

Updated On : 9 ஜூன், 2014 at 3:56 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:03 AM

கோவை பாரதியார் பல்கலைக்கழகம் எம்.எட். படிப்பு தொடங்குவதற்காக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் (என்.சி.டி.இ.) தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் போலியானது என்ற சர்ச்சை கிளம்பியதைத் தொடர்ந்து, அது குறித்த செய்தி தினமணி நாளிதழில் (ஜூன் 7) வெளியானது. இதைத் தொடர்ந்து, தற்போது எம்.எட். படிப்பு குறித்த பிரமாணப் பத்திர தகவல் இணையதளத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்விக்கூடம் சார்பில் எம்.எட். படிப்பினை அஞ்சல் வழியில் (தொலைதூரக் கல்வி) நடத்துவதற்கு, பெங்களூரில் உள்ள தேசிய ஆசிரியர் கல்வி

கவுன்சிலின் மண்டல இயக்குநருக்கு 2014 பிப்ரவரி 26-ஆம் தேதி விண்ணப்பம் செய்யப்பட்டு, அங்கீகாரமும் கிடைத்து விட்டது.

Advertisement

தற்போது எம்.எட். சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்ப விநியோகமும் நடந்து வருகிறது.

இதற்கென பல்கலைக்கழகம் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதில், எஸ்.சுதர்சன் என்பவர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தின் கல்வியியல் துறையில் முழுநேரப் பேராசிரியராக 2014 பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் பணிபுரிந்து வருவதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர் ஏற்கெனவே அரசு உதவி பெறும் தனியார் கல்வியியல் கல்லூரியில் புகார் ஒன்றில் சிக்கி பணிநீக்கம் செய்யப்பட்டவர். நிலைமை இவ்வாறிருக்க பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி பல்கலைக்கழக முழுநேரப் பேராசிரியராக எஸ்.சுதர்சன் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டார் என்றும், விளம்பரம் செய்யாமல் எப்போது தேர்வு செய்யப்பட்டார் என்றும், பல்கலைக்கழக ஆசிரியர்கள் கேள்வி எழுப்பினர்.

பல்கலைக்கழகத்தில் முழுநேர ஆசிரியர் நியமிக்கப்படும்போது, பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிமுறைகளின்படி நியமிக்கப்பட வேண்டும்.

எனவே முழுநேரப் பேராசிரியர் நியமனத்தில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.

இந்த நியமனம் குறித்து பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு எந்த விவரமும் தெரியாத நிலையில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆசிரியர் குறித்த பிரமாணப் பத்திரம் போலியானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்த செய்தி தினமணி நாளிதழில் (ஜூன் 7) வெளியானது. இதனிடையே பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து (ட்ற்ற்ல்:ஜ்ஜ்ஜ்.க்ஷ-ன்.ஹஸ்ரீ.ண்ய்ள்க்ங்ஹச்ச்ண்க்ஹஸ்ண்ற்ம்ங்க்.ல்க்ச்) எம்.எட். படிப்பு தொடங்க தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திர தகவல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

அரசு விசாரிக்க வேண்டும்: இதுகுறித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சி.பிச்சாண்டி கூறுகையில், எம்.எட். படிப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திர தகவல் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பதில் இருந்தே, இவ்விஷயத்தில் ஏதோ தவறு உள்ளது தெரியவருகிறது.

இவ்விஷயம் குறித்து ஆளுநரும், தமிழக அரசும் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு நடந்திருந்தால் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கிரிமினல் நடவடிக்கை தேவை

இதுதொடர்பாக, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி கூறுகையில், பல்கலைக்கழகங்களே தவறு செய்யும்போது இணைப்புக் கல்லூரிகள் எப்படி நியாயமாக செயல்படும் என்ற கேள்வி எழுகிறது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.எட். படிப்பு தொடங்க தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திர விவரம் குறித்து முழுமையாகத் தெரியவில்லை.

அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரம் உண்மையானதா, போலியானதா, முறைகேடுகள் எதுவும் நடந்திருக்கிறதா என்பது குறித்தும் தெரியவில்லை. ஒரு பல்கலைக்கழகமே தவறு செய்வது மன்னிக்க முடியாத செயலாகும். இதில் ஏதாவது தவறு நடந்திருப்பது தெரியவந்தால் குறிப்பிட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.