பழனி அருகே காதலியின் தலையை துண்டித்துக் கொன்ற காதலன் கைது
பழனியை அருகே நெய்க்காரபட்டியை அடுத்த கே.வேலூரில் காதலித்த வாலிபரை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியதால் இளம்பெண் தலை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்
பழனியை அருகே நெய்க்காரபட்டியை அடுத்த கே.வேலூரில் காதலித்த வாலிபரை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியதால் இளம்பெண் தலை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழனியை அடுத்த கே.வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கரப்பன். இவரது மகள் நித்யா(16). நித்யா அதே பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். நித்யா தேவி தினமும் வேலைக்குச் செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த வீரப்பன் மகன் பாண்டித்துரை(19) என்பவரை சந்தித்து பேசி வந்துள்ளார்.பாண்டித்துரை கட்டிட வேலை செய்து வருகிறார். இருவரும் அக்கம்பக்கத்தினர் மட்டுமன்றி உறவினர்களுமாவர். பாண்டித்துரை நித்யாவை காதலிப்பதாக கூறியதையடுத்து இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இவர்கள் காதலிப்பதை அறிந்த இருவீட்டாரும் கண்டித்துள்னர்.
இந்நிலையில் நித்யா தேவி பாண்டித்துரையை திருமணம் செய்து வைக்கக்கோரி பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்று புகார் செய்துள்ளார். பாண்டித்துரையின் பெற்றோரை அழைத்து பேசிய போலீசார் நித்யா தேவியின் வயதை காரணம் காட்டி சில ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்து வைக்கும்படி எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் பாண்டித்துரையை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்திய நித்யாவால் பாண்டித்துரை வெறுப்பு அடைந்துள்ளார்.
புதன்கிழமை நித்யாவை தனியாக அழைத்து சென்ற பாண்டித்துரை கற்பழித்து கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். இரவு முழுவதும் தேடியும் நித்யாவை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடி கடைசியில் பழனி தாலுகா போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசாரும் நித்யாவை பல இடங்களிலும் தேடிய நிலையில் வியாழக்கிழமை ரீச்வாய்க்கால் பகுதியில் நித்யா உடல் தனியாகவும், தலை பாலத்தின் கீழேயும் துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நித்யா தலை துண்டாகி இருந்த இடத்தில் தடயங்களை சேகரித்த போலீஸார் நித்யாவை கொன்றவர்கள் கற்பழித்த பின் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை துவக்கியுள்ளனர்.
மேலும், தப்பி ஓடிய பாண்டித்துரையை கைது செய்த போலீஸார் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நித்யா கொலையால் கே.வேலூர் மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். நித்யா உறவினர்கள் பலரும், நித்யா தைரியமிக்க பெண் என்ற நிலையில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் கொலையை அரங்கேற்றியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.