விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 12-ம் தேதி பொதுமக்கள் முன்னிலையில் கிராம சபைக் கூட்டம் நடத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: விருதுநகர் மாவட்டத்தில் 450 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தி அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்க வேண்டும். இக்கூட்டம் ஊராட்சி தலைவர் தலைமையிலும், பொதுமக்கள் முன்னிலையிலும் நடத்தப்பட வேண்டும். இதையடுத்து, கிராமத்தில் மேற்கொண்டுள்ள பணி விவரங்கள், நலத்திட்டங்கள் உள்ளிட்ட முழு விவரங்களையும் விளக்கமாக எடுத்துரைக்கவும் வேண்டும்.
மேலும், முக்கியமாக அடிப்படை வசதிகளான குடிநீர் விநியோகம், மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் சுகாதார கேடுகளுக்கான தடுப்பு நடவடிக்கை, பயன்பாடற்ற கிணறுகளை கண்டறிந்து விபத்து நிகழ்வதை தடுத்தல், சுகாதார வளாகம் பயன்படுத்துதல், பிளாஸ்டிக் உபயோகம், இறைச்சிக் கடைகளை ஒழுங்குப்படுத்துதல், தெருக்களில் சூரிய சக்தி விளக்குகளை பராமரித்தல், புகையிலை பயன்பாட்டை தடுத்தல் குறித்து விழிப்புணர்வு, ஊராட்சிகளில் நடந்து வரும் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் வரவு செலவு குறித்து விவாதித்தல், மகளிர் திட்டம் அடிப்படை தகவல் சேகரித்தல், பிரதம மந்திரி கிராம சாலைகள் இணைப்புத் திட்டம், ஊராட்சிக்கான 2013-14 ஆண்டிற்கான தணிக்கை மற்றும் பொதுமக்கள் தொடர்பான திட்டங்கள் ஆகியவைகள் குறித்து கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.
அதனால், இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று கிராமத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களின் முழு விவரங்களையும் அறிந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.