முகப்பு
தமிழ்நாடு

வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனுக்காக இடம்பெயர்ந்தோர் வள மையம்: முதல்வர்

வெளிநாடுவாழ் தமிழர்கள் நலனுக்காக இடம்பெயர்ந்தோர் வள மையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:28 AM
பகிர்:

வெளிநாடுவாழ் தமிழர்கள் நலனுக்காக இடம்பெயர்ந்தோர் வள மையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, இடம்பெயர்ந்தோர் வள மையம் ஒன்று சென்னையில் புதிதாக அமைக்கப்படும். இதற்காக, மாநில அரசின் ஆண்டு செலவுத் தொகை ரூ.15 லட்சம் ஆகும். வெளிநாடு வாழ் தமிழர்கள் இறப்பின்போது ஆணையர் (மறுவாழ்வு) மூலமாக அவர்களின் உடலை தமிழகத்துக்கு திரும்பக் கொண்டு வருவதற்கு ஏற்படும் செலவினத்தை மேற்கொள்ள ரூ.1 கோடி சுழற்சி நிதியாக ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு, மாநில அரசின் நிதி ஒதுக்கீடு ரூ.1 கோடி ஆகும்.

படை பணிக்கு தனது ஒரே மகன், மகளை அனுப்பும் பெற்றோருக்கு ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.750-இல் இருந்து உயர்த்தப்பட்டு, ஒரே தடவையாக ரூ.20 ஆயிரமும், வெள்ளிப் பதக்கமும் வழங்கப்படும். மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட மகன், மகளை அனுப்பும் பெற்றோர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்படும் மானியம் ஆயிரத்தில் இருந்து உயர்த்தப்பட்டு, ஒரே தடவையாக ரூ.25 ஆயிரமும் வெள்ளிப் பதக்கமும் வழங்கப்படும். இதற்கு, மாநில அரசின் செலவுத் தொகை ரூ.3.65 கோடி ஆகும்.

தொழிற்கல்வி, கலை, அறிவியல் படிப்புகளில் பொது நேர கல்லூரிகளில் பயிலும் முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு இப்போது வழங்கப்படும் கல்வி உதவித் தொகை மாலை நேரக் கல்லூரிகளில் பயிலும் முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கும் வழங்கப்படும். தற்போது முன்னாள் படை வீரர்கள், படை வீரர் கைம்பெண்களுக்கு வங்கிக் கடன் வட்டி மானியத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை பெறப்படும் கடன்களுக்கு 75 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரூ.5 லட்சம் உச்ச வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். அது போலவே கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 60 மாதங்களில் இருந்து 96 மாதங்களாக நீட்டித்து வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.