சிலைகளை வழங்க கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை
பழனி அருகே சிலைகளை வழங்க கோரி ஏராளமான பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பழனி அருகே சிலைகளை வழங்க கோரி ஏராளமான பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பழனி அருகே கணக்கன்பட்டியில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் வழிபடும் அருள்மிகு வீரமாத்தியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அருள்மிகு வினாயகர், அருள்மிகு வீரமாத்தியம்மன், அருள்மிகு ராமர், லட்சுமணர், சீதா தேவி உள்ளிட்ட ஏழு ஐம்பொன் சிலைகள் உள்ளது. இக்கோயிலில் வழிபடுவது தொடர்பாக கோயில் பூசாரி வீராச்சாமி என்பவருக்கும், சமுதாய மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோயிலில் இருந்த சிலைகளை வருவாய்த்துறையினர் மற்றும் போலீஸார் மீட்டு வருவாய்த்துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. நீண்ட காலமாக சிலைகள் வருவாய்த்துறை வசம் இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சிலைகளை பூஜை செய்ய தங்கள் வசம் வழங்க வேண்டும் என கோரி ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வட்டாட்சியர் மாரியப்பன், பிரச்னைக்குரிய பூசாரி வீராச்சாமி மற்றும் பொதுமக்கள் தரப்பினர் இருவரும் வந்து தங்கள் பிரச்னைக்கு தீர்வு காணாத நிலையில் சிலைகளை ஒரு தரப்பினரிடம் வழங்க முடியாது என்றும் இரு தரப்பினரும் வேறு ஒரு நாளில் வந்து பிரச்னையை தீர்த்துக் கொண்டு சிலைகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலையில் பரபரப்பு ஏற்பட்டது.