என்எல்சி: தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 4 ஆயிரம் தொழிலாளர்கள் கைது
என்எல்சி நிரந்தர ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக இன்று காலை தலைமை அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
என்எல்சி நிரந்தர ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக இன்று காலை தலைமை அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி நிரந்தரத் தொழிலாளர்கள் ஜூலை 20ம் தேதி இரவுப் பணி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னர் அறிவித்தபடி, செவ்வாய்க்கிழமை அன்று முதல் சுரங்கத்திலும், புதன்கிழமை அனல்மின் நிலையம் ஒன்றையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
வியாழக்கிழமை தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். காலை 9.50 மணியளவில் பெரியார் சிலையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டிருந்தனர். அங்கிருந்து அவர்கள் கோஷம் எழுப்பியவாறு என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக வந்தனர்.
இவர்களை நேரு சிலை அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
பாதுகாப்புப் பணிக்காக ஏடிஎஸ்பி செந்தில் தலைமையில் நெய்வேலி காவல் துணைக் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.