இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதிக்கு கலாம் விருது: முதல்வர் இன்று வழங்குகிறார்
சுதந்திர தினத்தை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள அப்துல் கலாம் விருதுக்கு அரியலூரைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி என்.வளர்மதி
சுதந்திர தினத்தை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள அப்துல் கலாம் விருதுக்கு அரியலூரைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி என்.வளர்மதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரோ நிறுவனத்தின் செயற்கைக்கோள் திட்டங்களில், தொலையுணர்வு செயற்கைக்கோள் திட்டத்தின் முதல் பெண் இயக்குநர் வளர்மதி என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கப் பதக்கம், ரூ.5 லட்சம்: சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெறும் சுதந்திர தின விழாவில் வளர்மதிக்கு 8 கிராம் தங்கப் பதக்கம், ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கிய அப்துல் கலாம் விருதை முதல்வர் ஜெயலலிதா வழங்குகிறார்.
அறிவியல் வளர்ச்சி, மாணவர்கள் நலன், மனிதவியலுக்கு பாடுபட்டதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு விருது: சென்னை திருவல்லிகேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலை தூய்மைப்படுத்த ஆவன செய்ததற்காக சுற்றுலா, கலை, பண்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஆர்.கண்ணனுக்கு "நல் ஆளுமை' விருதை முதல்வர் ஜெயலலிதா வழங்குகிறார். அரசு ஊழியர்கள் அடங்கிய குழு, அரசுத் துறை ஆகிய பிரிவுகளில் தலா ஒருவருக்கு இதே "நல் ஆளுமை' விருது வழங்கப்பட உள்ளது.
பிற விருதுகள்: சுதந்திர தினத்தை ஒட்டி, வீரதீரச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது (ரூ.5 லட்சம், சான்றிதழ், பதக்கம்),
மாற்றுத் திறனாளிகளுக்காக பாடுபடும் தனிநபர், அமைப்பு, தனியார் நிறுவனம் ஆகியவற்றுக்கு விருதுகள் அளிக்கப்பட உள்ளன.
மேலும், மகளிர்-குழந்தைகள் மேம்பாட்டுக்கு பாடுபடுவோருக்கும், சிறப்பாகச் செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கும் விருதுகள் கொடுக்கப்பட உள்ளன.
மேலும், சிறந்த உள்ளாட்சி அமைப்புகள் வரிசையில் மாநகராட்சியாக மதுரையும், நகராட்சியாக புதுக்கோட்டையும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.