திருமாவளவனைத் தாக்க முயற்சி: வைகோ கண்டனம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனைத் தாக்க முயற்சிக்கப்பட்ட சம்பவத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனைத் தாக்க முயற்சிக்கப்பட்ட சம்பவத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பட்டுக்கோட்டை பகுதியில் கொடியேற்று விழாவில் கலந்துகொள்ள திருமாவளவன் சென்றபோது, அவரைத் தாக்குவதற்கு சில வன்முறையாளர்கள் தயாராக இருந்துள்ளனர். பிறகு, காவல்துறையினர் திருமாவளவனை வேறு பாதை வழியாக பயணிக்கச் சொல்லிவிட்டு, வன்முறையாளர்களைக் கைது செய்துள்ளனர்.
பெட்ரோல் அடைக்கப்பட்ட பாட்டில்கள் வன்முறையாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் அடைந்தேன்.
காவல்துறையினரிடம் விசாரித்தபோது, இதில் எந்த அரசியல் கட்சியினரும் சம்பந்தப் படவில்லை என்றும், அந்தப் பகுதியில் ஏற்கனவே இப்படிப்பட்ட வன்முறையில் ஈடுபடும் நபர்களால்தான் இந்தத் தாக்குதல் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்த வன்முறையில் ஈடுபட இருந்தவர்கள், திட்டத்தை வகுத்தவர்கள் யாராக இருப்பினும் அவர்களைக் காவல்துறை உடனடியாக கைது செய்து, சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்தச் செயலில் ஈடுபட முயன்ற வன்முறையாளர்களுக்கு பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, திருமாவளவனுக்கு காவல்துறை தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.