கடலூர் மாவட்டத்தை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: தமிழிசை சவுந்தராஜன்
மழை, வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கடலூர் மாவட்டத்தை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்தார்.
மழை, வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கடலூர் மாவட்டத்தை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் அவர் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு சென்னை பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தை நிவாரண மையமாக வைத்து, நிவாரணப்பொருள்களை சேகரித்து உதவி செய்து வருகிறோம். கடலூர் மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வந்துள்ளேன். சென்னை நகரம் வெள்ளநீர் வடிந்து குப்பை குவியலாக உள்ளது. எனவே வியாழக்கிழமை முதல் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பாஜக சார்பில் சென்னை நகரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடவுள்ளோம்.
சென்னையில் நான் படகில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று நிவாரண உதவிகள் வழங்கியுள்ளேன். பல்வேறு தன்னார்வ தொண்டர்களும், தொண்டு நிறுவனங்களும் உதவிகள் புரிந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் மருத்துவ உதவி தேவைப்படுகிறது. பாஜக சார்பில் மருத்துவ உதவி செய்து வருகிறோம். தொற்றுநோய் பரவாமல் இருக்க மத்திய அரசு சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்பை அறிந்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு 940 கோடி நிதியை உடனே வழங்கினார். பின்னர் சென்னை பகுதியை நேரில் வந்து பார்வையிட்டு மேலும் ரூ.1000 கோடி வழங்கியுள்ளார். அதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement
தமிழக அரசு சில நிவாரணங்களை அறிவித்துள்ளது. இந்த நிவாரணம் போதாது. எனவே முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடிசை பகுதி மக்களுக்கு காங்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும். மேலும் இனிமேல் பேரழிவை சந்திக்காத வகையில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி மறுசீரமைப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்தார். பேட்டியின் போது மாநில இளைஞரணி துணைத் தலைவர் தாமரை மணிகண்டன், கடலூர் மாவட்ட பொருளாளர் வே.ராஜரத்தினம், மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் ஜெயக்குமார், நகரத் தலைவர் திருமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.