மணிமுத்தாறு அணையில் 5 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறப்பு
மணிமுத்தாறு அணை நிரம்பியதை அடுத்து இன்று காலை 7 மணியளவில் அணையின் 7 வழிந்தோடிகள் வழியாக 5 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது.
மணிமுத்தாறு அணை நிரம்பியதை அடுத்து இன்று காலை 7 மணியளவில் அணையின் 7 வழிந்தோடிகள் வழியாக 5 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் தொடர்ந்து உபரிநீர் திறக்கப்படுவதால் தாமிரவருணி ஆற்றில் 15 ஆயிரம் கனஅடி செல்கிறது. இதனால் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட 12 அணைகளும் முழுக் கொள்ளளவை எட்டின.
118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் 118 அடியை தாண்டியது. இதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது. அணையின் 2 வழிந்தோடிகள் வழியாக அணைக்கு வந்து கொண்டிருந்த 2000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது.
அடுத்த 2 மணி நேரத்தில் அணையின் நீர்வரத்து 4800 கனஅடியாக அதிகரித்தது. இதனை தொடர்ந்து அணையின் 7 உபரிநீர் வழிந்தோடிகள் வழியாக 5000 கனஅடி தண்ணீர் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
வடகிழக்குப் பருவ மழையின்போது இம்மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்புவதுண்டு. 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2014 இல் நவம்பர் மாதத்தில் பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பியது. மணிமுத்தாறு அணை டிச. 22 ஆம் தேதி நிரம்பியது. நிகழாண்டில் வளமையான மழை அளவை விட கூடுதலாக மழை பெய்ததால், மணிமுத்தாறு அணை முன் கூட்டியே நிரம்பியுள்ளது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 5364 கனஅடியும், சேர்வலாறு அணைக்கு 3 ஆயிரம் கனஅடியும் நீர்வரத்து இருந்தது. இவ்விரு அணைகளிலிருந்தும் 8 ஆயிரம் கனஅடி திறந்து விடப்படுவதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 141.90 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 147.14 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 83.50 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 82 அடியாகவும் இருந்தது. கடனாநதி அணையிலிருந்து உபரிநீர் 800 கனஅடியும், ராமநதி அணையில் இருந்து 200 கனஅடியும் திறந்து விடப்படுகிறது.
பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுவதால், தாமிரவருணி ஆற்றில் 15 ஆயிரம் கனஅடி செல்கிறது. இதனால் மீண்டும் ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரத்தில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.