ஊராட்சித் தலைவி மீது புகார்: நெல்லையில் 5 கவுன்சிலர்கள் ராஜினாமா
சங்கரன்கோவில் ஒன்றியம், பெரும்பட்டி ஊராட்சியில் பல லட்சம் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகவும், மக்கள் பணி நடைபெறவில்லை என புகார் தெரிவித்து
சங்கரன்கோவில் ஒன்றியம், பெரும்பட்டி ஊராட்சியில் பல லட்சம் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகவும், மக்கள் பணி நடைபெறவில்லை என புகார் தெரிவித்து 2 பெண் உள்பட 5 ஊராட்சி உறுப்பினர்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் ராஜினாமா கடிதம் அளித்தனர்.
சங்கரன்கோவில் ஒன்றியம், பெரும்பட்டி ஊராட்சி உறுப்பினர்கள் ஆர். சூர்யமகராஜா (3 ஆவது வார்டு) தலைமையில் எம். சீனியம்மாள் (4 ஆவது வார்டு), கே. வீரபாண்டியன் (5 ஆவது வார்டு), இ. கிருஷ்ணவேனி (7 ஆவது வார்டு), எம். முத்துராமலட்சுமி (8 ஆவது வார்டு) ஆகியோர் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் அளித்த மனு: பெரும்பட்டி ஊராட்சி தலைவி ஆர். கலைச்செல்வி. ஊராட்சி நிர்வாகத்தில் அவரது கணவரான குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவராக பணி செய்து வரும் ராமனாதன், தலையிட்டு நிர்வாகம் செய்து வருகிறார்.
மக்கள் பிரச்னைக்காக தலைவியை ஊராட்சி உறுப்பினர்களோ, பொதுமக்களோ சந்திக்க முடியாத சூழல் உள்ளது. ஊராட்சிக் கூட்டங்களில் தன்னிச்சையாகவே தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. தீர்மானப் புத்தகத்தில் கடந்த 6 மாதங்களாக உறுப்பினர்கள் கையெழுத்திடாமல் புறக்கணித்து வருகிறோம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. ஊராட்சி நி்ர்வாகத்தில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள், ஊராட்சி செயலர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் மக்கள் பணிகள் தேக்கமடைந்துள்ளது. ஊராட்சி பணிகள் அனைத்து முடங்கி உள்ளது. மக்கள் பணி செய்ய முடியாத நிலையில் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.