அரியலூரில் எல்.ஐ.சி முகவரிடம் ரூ.4,500 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது
அரியலூரில் எல்.ஐ.சி முகவரிடம் ரூ.4,500 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது செய்யப்பட்டார்.
அரியலூரில் எல்.ஐ.சி முகவரிடம் ரூ.4,500 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் நாயக்கர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நீலமேகம்(45). எல்.ஐ.சி.முகவர். இவர் மாமனார் சொத்துக்களை தனது மனைவி பெயரில் பதிவு செய்ய அரியலூர் மாவட்டம் நெ.1 சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் விண்ணப்பித்து பல நாட்களாகியும் இதுவரை அவருக்கு பத்திரத்தை கொடுக்கவில்லை.
இதையடுத்து நீலமேகம் கடந்த 2-ம் தேதி சார்பதிவாளர் சுவேதர்கான் என்பவரை அணுகியுள்ளார். அப்போது அவர்,அலுவலகத்திலிருந்து தங்களுடைய பத்திரத்தை விடுவிக்க ரூ.4,500 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
Advertisement
லஞ்சம் கொடுக்க விரும்பாத நீலமேகம் இது குறித்து அரியலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார், நீலமேகத்திடம் புதன்கிழமை ரசாயனம் தடவிய ரூ. 4,500யை கொடுத்தனராம்.
போலீஸாரின் ஆலோசனைப்படி, நீலமேகம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று அங்கு சுவேதர்கானிடம் ரூ. 4,500 யை கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் ஸ்ரீதர், சக்திவேல்,அழகுமலை ஆகியோர், சுவேதர்கானை கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தனர். மேலும், பெரம்பலூர் மாவட்டம்,வேப்பம்தட்டையிலுள்ள அவரது வீட்டிலும் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.