முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் காலமானார்...
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்.
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான செங்கல்பட்டு துரைக்கண்ணு கோபிநாத், கடந்த 1952 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அந்த தொடரின் கடைசிப் போட்டியில் இந்திய அணி அதன் முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம், முதல் முறையாக டெஸ்ட் போட்டியை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த பெருமை இவரைச் சேரும்.
இதனைத் தொடர்ந்து, இந்திய மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் அணிகளின் சார்பில் 8 டெஸ்ட் போட்டிகளிலும், 83 முதல் தர போட்டிகளிலும் விளையாடிய சி.டி. கோபிநாத், ரஞ்சி கோப்பை போட்டிகளில் மொத்தம் 2,349 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 1955 முதல் 56 வரையில் மெட்ராஸ் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
Advertisement
இந்த நிலையில், சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த சி.டி. கோபிநாத் வியாழக்கிழமை (ஏப். 9) அன்று காலமானார் என அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் நீல் ஹார்வேக்கு பிறகு உலகின் 2 ஆவது மூத்த கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்த சி.டி. கோபிநாத்தின் மறைவுக்குப் பல்வேறு விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.