முகப்பு
தமிழ்நாடு

பொது இடங்களில் முகவரியின்றி வன்முறையைத் தூண்டும் வகையில் சுவரொட்டிகள்: 3 பேர் கைது

புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் அச்சக முகவரியின்றி அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை ஓட்டியதாக 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:35 AM
பகிர்:

புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் அச்சக முகவரியின்றி அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை ஓட்டியதாக 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறியது:

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரைக் கண்டித்தும், அவர் மீதான புகார் மனுக்களை தமிழக ஆளுநரிடமும், மத்திய அமலாக்க இயக்குநரிடம் அளிக்கும் பேரணியில் பங்கேற்க சென்னை நோக்கி வரவேண்டும் என்பது உள்ளிட்ட வாசகங்களுடன், மகாபாரத வியாசர், ராமாயண வால்மீகி வழி வந்த தமிழக முத்தரையர், பரதவர், வலையர், அம்பலகாரர்  இனப்போராளிகள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் பெயருடன் அச்சகத்தின் முகவரி இல்லாமல் வெளியிடப்பட்ட சுவரொட்டிகள் புதுகை நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அந்த சுவரொட்டிகளை இரவோடு இரவாக சுவடு தெரியாமல் அப்புறப்படுத்தினர்.எனினும், இதே போல ஆலங்குடி தொகுதியிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததால் இந்த விஷயம் வெளியில் தெரிய வந்தது.

இது குறித்து புதுகை நகர காவல் நிலையப் போலீஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சுவரொட்டிகளை ஒட்டிய  திருக்கட்டளையைச் சேர்ந்த மா. பாலகிருஷ்ணன்(28), பி. சுந்தரபாண்டி(20), து. சுந்தர்ராஜ்(17) ஆகிய மூவரையும் வியாழக்கிழமை கைது செய்தனர்.

இவர்கள் மீது பொது அமைதிக்கு குந்தகமாக வன்முறையைத்தூண்டும் வகையில் பொய்யான தகவல்களுடன், அச்சக முகவரி இல்லாமல் சுவரொட்டி ஓட்டியது போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, மூவரையும் பிற்பகலில் போலீஸார் பிணையில் விடுதலை செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →