முகப்பு
தமிழ்நாடு

பிளவக்கல் அணையிலிருந்து விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேற்கு மலைத் தொடர்ச்சி அடிவாரப்பகுதியில் உள்ள பிளவக்கல் அணையிலிருந்து விவசாயப்பணிகள் மேற்கொள்வதற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என வட்டார நீர்ப்பாசன சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 11 அக்டோபர், 2015 at 3:22 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:26 PM

மேற்கு மலைத் தொடர்ச்சி அடிவாரப்பகுதியில் உள்ள பிளவக்கல் அணையிலிருந்து விவசாயப்பணிகள் மேற்கொள்வதற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என வட்டார நீர்ப்பாசன சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி அடிவாரப்பகுதியில் விவசாயிகள் பயனடையும் வகையில் ஒரே இடத்தி்ல் பிளவக்கல் அணை-கோவிலாறு அணை அமைந்துள்ளது. இதில், பிளவக்கல் அணையில் 48 அடி நீர்தேக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம், சுந்தரபாண்டியம், கிருஷ்ணன்கோவில், குன்னூர், நத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள 40 பெரிய அளவிலான கண்மாய்களுக்கு நீர்வரத்தும், அதனால் 10 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்களும் பாசன வசதியையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் அவ்வப்போது பெய்த மழையால் அணைக்கும் நீர் வரத்து ஏற்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 3 மாதகாலமாக 35 அடிவரையில் தண்ணீர் தேங்கியிருந்தது. இந்நிலையில், கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து, அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலையில் 44.56 அடி வரையில் தண்ணீர் தேங்கியுள்ளது.

Advertisement

தற்போது, பிளவக்கல் அணைக்கு உள்பட்ட பகுதியில் நெல், மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது. அதனால், விவசாயிகள் பயனடையும் வரையில் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் நீர்ப்பாசன சங்கத்தினர் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பிளவக்கல் பிரிவு வட்டார நீர்ப்பாசன சங்கத் தலைவர் இருளப்பன் கூறுகையில், தமிழக அளவில் விருதுநகர் மாவட்டத்தில் தான் ஒரே இடத்தில் பிளவக்கல் பெரியாறு-கோவிலாறு அணைகள் அமைந்துள்ளது. தற்போதைய நிலையில் 44.56 அடிவரையில் தண்ணீர் தேங்கியுள்ளது. 41 அடி வரையில் நீர் இருந்தாலே பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் நெல் நடவு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் கடைமடை பகுதியில் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும். அதேபோல், ஷட்டர் பகுதியிலும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாத காரணத்தால் நீர்கசிவு ஏற்பட்டு வீனாகும் நிலையும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அணையின் நீர் வள ஆதார அமைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போதைய நிலையில் 44.56 அடி வரையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதை பாசனத்திற்கு திறக்க வேண்டு்ம் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு உத்தரவிட்டால் தான் திறக்க முடியும். இதுவரையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எவ்விதமான தகவலும் அரசிடம் இருந்து வரவில்லை என அவர் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.