வெள்ளாற்றில் மூழ்கிய மாணவர் சடலமாக மீட்பு: பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு
கடலூர் மாவட்டம் ராமநத்தம் பகுதியில் வெள்ளாறு பாய்ந்து செல்கிறது. கடந்த சில நாட்களாக கடலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஆற்றில் தண்ணீர் சற்று அதிகமாக ஓடுகிறது.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் பகுதியில் வெள்ளாறு பாய்ந்து செல்கிறது. கடந்த சில நாட்களாக கடலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஆற்றில் தண்ணீர் சற்று அதிகமாக ஓடுகிறது. இந்நிலையில், ராமநத்தம் பெரியங்கியம் காலனி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகன் நந்தீஷ் (13), 7-ம் வகுப்பு மாணவர் மற்றும் அவரது மகள் வழி பேரன் அரீஷ்(9) நான்காம் வகுப்பு மாணவர் ஆகியோர் திங்கட்கிழமை மாலையில் ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர்.
வெகுநேரமாகியும் திரும்பாததால் கிராமத்தினர் ஆற்றுக்குச் சென்ற தேடியதில் இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது. வெகுநேரத் தேடுதலுக்குப் பின்னர் அரீஷ் சடலமாக மீட்கப்பட்டார்.
தொடர்ந்து திட்டக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர், விருத்தாசலம் கோட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையிலான வருவாய்துறையினர் முகாமிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நந்தீஷ் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து இருவரது சடலமும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து ராமநத்தம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.