முகப்பு
தமிழ்நாடு

கர்ப்பிணி எரித்து கொலை: மாமனார் மாமியாருக்கு ஆயுள் தண்டனை

கர்ப்பிணியை எரித்து கொலை செய்த மாமனார், மாமியாருக்கு கடலூர் மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:59 AM
பகிர்:

கர்ப்பிணியை எரித்து கொலை செய்த மாமனார், மாமியாருக்கு கடலூர் மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தச்சூர்காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(51). இவரது மனைவி ராஜாம்பாள்(43). இவர்களது மகன் ராஜேஷ்வரன்(28) அதேப்பகுதியைச் சேர்ந்த பி.எஸ்.சி பி.எட் பட்டதாரியான தனியார் பள்ளி ஆசிரியர் ஜோதிலஷ்மியை(25) கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரியில் காதல் திருமணம் செய்துக் கொண்டார்.

இத்திருமணத்திற்கு ராஜேஸ்வரன் குடும்பத்தினர் எதிர்ப்புத்தெரிவித்ததால் தம்பதியினர் 3 மாதம் ஊட்டியில் குடும்பம் நடத்தினர். இந்நிலையில், கர்ப்பிணியான ஜோதிலஷ்மியை அழைத்துக்கொண்டு ராஜேஷ்வரன் தன் வீட்டிற்கு சென்றார். ஆனால் அவரின் பெற்றோர் மருமகளை ஏற்கமறுத்ததால் ஜோதிலஷ்மி தனியாக தாய்வீடு சென்றார். ராஜேஷ்வரன் பெற்றோருடன் இருந்து வந்தார்.

எனினும், ஜோதிலஷ்மி கடந்த ஆகஸ்டு 18 ஆம் தேதி கணவர் வீட்டிற்குச் சென்றபோது மாமனார், மாமியார் சேர்ந்து அவரை வீட்டை விட்டு அடித்து விரட்ட முயன்றனர். அங்கிருந்த ராஜேஷ்வரன் எதுவும் செய்ய இயலாத நிலையில் வீட்டை விட்டு வெளியே போய் விட்டாராம்.

அப்போது, மாமனார், மாமியார் இருவரும் சேர்ந்து மருமகள் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்ததாகத் தெரிகிறது. இதில், பலத்த காயமுற்ற ஜோதிலஷ்மி  அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆக.19 ஆம் தேதி இறந்தார்.

இதுகுறித்து ராமநத்தம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை

கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் நீதிபதி எம்.செல்வம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கினார். அதில், மருமகளை கொலை செய்த மாமனார் மாமியார் இருவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி ஆஜரானார். இதனையடுத்து இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →