வனத்துறை சார்பில் மாவட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள்
விருதுநகர் மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரினங்கள் தொடர்பாக பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் இன்று நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரினங்கள் தொடர்பாக பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் இன்று நடைபெற்றது.
வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் வன உயிரினங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியும் வன உயிரின வாரவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணலாயம் சார்பில் வருகிற அக்.2ம் தேதி முதல் 8-ம் தேதி வரையில் கொண்டாடப்பட இருக்கிறது.
இவ்விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், பேச்சு, வினாடி-வினா ஆகிய போட்டிகள் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. இப்போட்டியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி பங்கேற்று தொடங்கி வைத்தார். விருதுநகர் வனத்துறை கோட்ட அலுவலர் அசோக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Advertisement
இதில் ஓவியப்போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் 89 பேரும், பேச்சு போட்டியில் 29 பேரும், வினாடி-வினா போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 9ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரையில் 24 குழுக்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிக்கு நடுவர்களாக சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பசுமைப்படை இயக்கத்தை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் செயல்பட்டனர்.
ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வனத்துறை சார்பில் அக்.5-ம் தேதி ஆட்சியர் தலைமையில் நடைபெற இருக்கிற விழாவில் வழங்கப்பட இருக்கிறது. இதில், தமிழ் மற்றும் ஆங்கிலம் பேச்சு போட்டியில் முதலிடம் பெற்றவர்கள் மட்டும் மாநில அளவில் நடைபெற இருக்கிற போட்டியில் பங்கேற்க வனத்துறை சார்பில் அழைத்துச் செல்லப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.