பணியாளர்கள் திடீர் போராட்டம்: நெல்லையில் 350 கிராமங்களுக்கு குடிநீர் நிறுத்தம்
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் குடிநீர் திட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் 350 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் குடிநீர் திட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் 350 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.
தாமிரவருணி ஆற்றில் குடிநீர் தி்ட்ட உறைகிணறுகள் அமைத்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நான்குனேரி, திசையன்விளை பேரூராட்சிப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கான் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக தாமிரவருணி ஆற்றங்கரையில் பத்தமடையில் நீரேற்றும் நிலையம் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு ஒப்பந்தம் அடிப்படையில் 37 பணியாளர்கள் பணியில் உள்ளனர். மாதம் ரூ. 3500 முதல் ரூ.5500 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
நான்குனேரி, திசையன்விளை பேரூராட்சி மற்றும் வழியோரமாக உள்ள 342 கிராம மக்களுக்கான இத்திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நீரேற்றும் நிலையத்தில் பணிசெய்து வரும் பணியாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை.
இதனை தொடர்ந்து பணியாளர்களுக்கு ஊதியம் நிலுவையின்றி வழங்க வேண்டும். ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் காரணமாக காலை 11.30 மணி முதல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இப்போராட்டத்தினால் 350 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பணியாளர் அண்ணாத்துரை கூறியது: ஒப்பந்த அடிப்படையில் கடந்த 15 ஆண்டுகளாக பணி செய்து வருகிறோம். மிக குறைந்த ஊதியத்தில் விடுமுறை கூட
இல்லாமல் பணி செய்து வருகிறோம். குறைந்த ஊதியமும் முறையாக ஒப்பந்தக்காரர் வழங்குவதில்லை. கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்காத நிலையில் பணி செய்து வருகிறோம். மக்களின் அத்தியாவசியத் தேவையான குடிநீர் திட்டத்தில் பணி செய்து வரும் எங்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 3 மாதம் ஊதியம் மொத்தமாக வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்றார் அவர்.