திருவண்ணாமலை மாவட்டம்: விவசாயத்துக்காக சாத்தனூர் அணை திறப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவையடுத்து, பாசனத்துகாக சாத்தனூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவையடுத்து, சாத்தனூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சாத்தனூர் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 119 அடி. மொத்த நீர் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி.
இந்த அணை மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
கடந்த வடகிழக்கு பருவ மழையின் போது அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில் பாசனத்துக்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டுமென திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று உத்தரவிட்டார்.
இதன்படி இன்று பிற்பகல் சாத்தனூர் அணை விவசாயத்துக்காக திறந்துவிடப்பட்டது. தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியம், திருவண்ணாமலை ஆட்சியர் ஞானசேகரன் ஆகியோர் அணையை திறந்துவைத்தனர்.
அணையின் வலப்புற கால்வாய், இடப்புற கால்வாய், திருக்கோயிலூர் அணைக்கப்பட்டு பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுவதன் மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.