சிதம்பரம் அருகே அரசு பேருந்தும், கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதல்: 51 பேர் காயம்
சிதம்பரம் அருகே அரசு பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் வியாழக்கிழமை மாலை நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 8 பேர் உள்ளிட்ட 51 பேர் படுகாயமடைந்தனர்.
சிதம்பரம் அருகே அரசு பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் வியாழக்கிழமை மாலை நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 8 பேர் உள்ளிட்ட 51 பேர் படுகாயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புவனகிரி தாலுக்கா வண்டுராயன்பட்டு எனுமிடத்தில் வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு சிதம்பரத்திலிருந்து நெய்வேலி டவுன்ஷிப் சென்ற புதுச்சேரி அரசு பேருந்தும், புவனகிரி நோக்கி வந்த ஏரிஸ் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இதில் கல்லூரி பேருந்து டிரைவர் ஆழ்வார் (45) என்பவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. சாந்தி (20) அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவிக்கும், ராஜேந்திரன் (50) உள்ளிட்ட மொத்தம் 51 பேர் காயமடைந்தனர். கல்லூரி பேருந்தில் பயணம் செய்த 8 மாணவ, மாணவியர்களும், அரசு பேருந்தில் பயணம் செய்த 42 பயணிகளும் படுகாயமடைந்தனர்.
இதில் 9 பேர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 12 பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த சிதம்பரம் கோடாட்சியர் பி.எஸ்.விஜயலட்சுமி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் அரசு மருத்துவமனை மற்றும் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் தெரிவித்து விசாரணை நடத்தினர். விபத்து குறித்து புவனகிரி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.