பண நடமாட்டத்தைத் தடுக்க பிரதமர் தலையிட வேண்டும் என திமுக கோருவது வேடிக்கை: இல.கணேசன்
தமிழகத்தில் பண நடமாட்டத்தை தடுக்க பிரதமர் மோடி தலையிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோருவது வேடிக்கையாக உள்ளது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறியுள்ளார்.
புதுச்சேரி: தமிழகத்தில் பண நடமாட்டத்தை தடுக்க பிரதமர் மோடி தலையிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோருவது வேடிக்கையாக உள்ளது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநில பாஜக சார்பில் தேர்தல் அறிக்கையை புதன்கிழமை வெளியிடட்ட பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போதைய தேர்தலில் அதிகளவில் பண நடமாட்டம் காணப்படுகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பண நடமாட்டத்தை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தலையிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோருவது வேடிக்கையாக உள்ளது. தற்போது ஜெயலலிதா முதல்வராக உள்ளதால், அவர் இக்கோரிக்கையை எழுப்புகிறார். அதே நேரத்தில் தற்போது கருணாநிதி முதல்வராக இருந்து மோடி இதில் தலையிட வேண்டும் என கோரினால், மாநில சுயாட்சிக்கு ஆபத்து என குரல் தருவார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மாநில அரசுகளுடன் இணைந்து தான் செயல்பட விரும்புகிறது. மாநில அரசுக்கு என உள்ள அதிகாரங்களில் மத்திய அரசு தலையிடமுடியாது. அதே நேரத்தில் தேர்தல் ஆணையம் தான் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.