திருச்சி அருகே பழைய இரும்பு கடையில் குண்டு வெடித்து ஒருவர் பலி
திருச்சி அருகே நவல்பட்டு என்னும் இடத்தில் பழைய ராக்கெட் லான்சர் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
திருச்சி: திருச்சி அருகே நவல்பட்டு என்னும் இடத்தில் பழைய ராக்கெட் லான்சர் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
நவல்பட்டு பகுதியில் புலான்குடிவர்மா காலனி பகுதியில் பழைய இரும்பு கடை ஒன்று இயங்கி வருகின்றது. அங்கு, இரண்டு பேர் அவர்கள் கொண்டு வந்திருந்த பழைய இரும்புகளை எடை போட்டனர்.
அப்போது, அவர்கள் கொண்டு வந்திருந்த இரும்பில் இருந்து ராக்கெட் லான்சர் ஒன்று வெடித்தது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள கும்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜன் மகன் ரங்கசாமி (26) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ராஜசேகன் (26) காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
ரங்கசாமி வீட்டின் பின்பக்கம் துப்பாக்கி தொழிற்சாலை உள்ளதாகவும், அங்கிருந்து தூக்கி எரியப்படும் இரும்பு துண்டுகளை சேகரிக்கும் போது எதிர்பாராதவிதமாக ஒன்று வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.