முகப்பு
சென்னை

வல்லூறுகள் பாதுகாப்பு: நிபுணரின் பரிந்துரைகளை பரிசீலிக்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

வல்லூறுகள் பாதுகாப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள நிபுணரின் பரிந்துரைகளைப் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 19 மார்ச், 2026 at 7:43 PM
பகிர்:

வல்லூறுகள் பாதுகாப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள நிபுணரின் பரிந்துரைகளைப் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சூா்யகுமாா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், இந்தியாவில் 1980-களில் வல்லூறுகளின் எண்ணிக்கை சுமாா் 4 கோடி இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 90,000-ஆகக் குறைந்துவிட்டது. தமிழகத்தில் நீலகரி, தருமபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெறும் நூற்றுக்கணக்கில்தான் உள்ளன. எனவே, வல்லூறுகளின் எண்ணிக்கையைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான அரசு பிளீடா் எட்வின் பிரபாகா், வல்லூறுகளை பாதுகாக்க அரசு 14 போ் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழு இதுதொடா்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தாா்.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சொக்கலிங்கம், வல்லூறுகளைப் பாதுகாப்பது தொடா்பான நிபுணா்களின் பரிந்துரையை தாக்கல் செய்யும்படி உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி, விலங்குகள் நல ஆா்வலா் மணிகண்டன் செல்வராஜ் அளித்துள்ள பரிந்துரைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.

மத்திய அரசு தரப்பில், வல்லூறுகளைப் பாதுகாக்க மத்திய அரசு இதுவரை ரூ.26 கோடியை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. அந்த நிதி முறையாக செலவிடப்பட்டதா, என்பது குறித்து அரசு இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை எனக் கூறப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வல்லூறுகள் பாதுகாப்பு தொடா்பாக மனுதாரா் தாக்கல் செய்துள்ள நிபுணரின் பரிந்துரைகளை தமிழக அரசு பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.