முகப்பு
தமிழ்நாடு

எழும்பூரில் ரயில் மறியல் போராட்டம்: வைகோ, திருமாவளவன் கைது

சென்னையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் மக்கள் நலக் கூட்டணி கட்சியினருக்கு சென்னை ராஜரத்தினம் மைதானத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையம் வரை ஊர்வலமாகச் செல்ல போலீஸார் அனுமதி அளித்திருந்தனர்.

Updated On : 18 அக்டோபர், 2016 at 2:52 PM
பகிர்:


சென்னை: சென்னையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் மக்கள் நலக் கூட்டணி கட்சியினருக்கு சென்னை ராஜரத்தினம் மைதானத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையம் வரை ஊர்வலமாகச் செல்ல போலீஸார் அனுமதி அளித்திருந்தனர்.

அதன்படி, இரண்டாம் நாள் போராட்டத்தைத் தொடங்கிய வைகோ, திருமாவளவன் தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியினர் எழும்பூர் ரயில்நிலையம் வந்ததும், தடுப்புகளை மீறி ரயில்நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை அங்கிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இறுதியில் அவர்களை போலீஸார் அனுமதித்தனர்.

அதனைத் தொடர்ந்து, எழும்பூர் ரயில்நிலையத்துக்குள் சென்ற வைகோ, திருமாவளவன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் 4 ஆவது நடைமேடை தண்டவளத்தில் இறங்கி வாரணாசி நோக்கிச் செல்லும் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

அப்போது பேசிய வைகோ, மத்திய அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கவே இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து இழைத்து வரும் துரோகத்தை தடுத்து நிறுத்தவே, ரயிலை மறித்து போராட்டம் நடத்துகிறோம் என்றார்.

திருமாவளவன் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடத்தப்படும் அடையாள போராட்டம்தான் இது. தமிழக அரசுக்கோ அல்லது கர்நாடக அரசுக்கோ எதிரான போராட்டம் அல்ல. மத்திய அரசுக்கு எதிராகப் போராடுகிறோம் என்றார் அவர்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் இவர்கள் ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.