சென்னை: மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில், சென்னை, சேப்பாக்கம், எழிலகம் கூட்டரங்கில் நடைபெற்றது.
எதிர்வரும் தீபாவளி பண்டிகை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில், தேவைப்படும் அத்தியாவசிய பொருள்கள் நியாயவிலை அங்காடிகளுக்கு உடனுக்குடன் நகர்வு செய்யப்படுவதை மாவட்ட வழங்கல் அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
தமிழக அரசு செயல்படுத்திவரும் சிறப்பு பொதுவிநியோக திட்டத்திற்கு வழங்கிவந்த மானியத்தை மத்திய அரசு 30.06.2012 உடன் நிறுத்திவிட்ட போதிலும், இதற்கான மானியச்சுமை முழுவதையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டு, மானிய விலையில் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பாமாயில் முதலியவற்றை வழங்கும் இத்திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. பச்சரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள் மற்றும் பாமாயில் முதலியன நியாயவிலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு, தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக விநியோகம் செய்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.
பருவமழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, மண்ணெண்ணெய் முதலிய பொருள்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் வகையில் அருகாமையிலுள்ள நியாயவிலை அங்காடிகளில் போதுமான பொருள் கையிருப்பில் வைக்கப்பட வேண்டுமென அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.