வனத்துறை பணிக்கு போலி நியமன ஆணை வழங்கி மோசடி: 4 பேர் மீது வழக்கு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வனத்துறை பணிக்கு போலி நியமன ஆணையை அனுப்பி இளைஞரிடம் ரூ.1.80 லட்சம் மோசடி செய்த வெளி மாநிலத்தவர் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வனத்துறை பணிக்கு போலி நியமன ஆணையை அனுப்பி இளைஞரிடம் ரூ.1.80 லட்சம் மோசடி செய்த வெளி மாநிலத்தவர் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மாமரத்துப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் தீபக்(24). இவர் கடந்த ஆக.19-ஆம் தேதி நாளிதல் ஒன்றில், வனத்துறைக்கு ஆள்கள் தேவை என்று வெளியான விளம்பரத்தை பார்த்து, அதில் கொடுக்கப்பட்டிருந்த செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். எதிர் முனையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதில் சரவணன் மட்டும் தமிழில் பேசியுள்ளார். மற்றவர்கள் வனத்துறை உயர் அதிகாரிகள் எனக்கூறிக்கொண்டு, ஆங்கிலத்தில் பேசியுள்ளனர். வேலைக்கான விண்ணப்பத்தை இணைய முகவரிக்கு அனுப்பும்படி தெரிவித்துள்ளனர்.
அதன்படி விண்ணப்பத்தை அனுப்பிய சில நாள்களில் தீபக்கை தொடர்பு கொண்டு அவர்கள், அவரை வேலைக்கு தேர்வு செய்துள்ளதாகவும், ஊழியர் காப்பீடு மற்றும் இதர நடைமுறைகளுக்கு பணம் செலுத்த வேண்டும் எனத்தெரிவித்துள்ளனர். மேலும் வங்கி கணக்கு எண்ணையும் அவருக்கு அனுப்பியுள்ளனர். இதை நம்பிய தீபக், அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்குக்கு ரூ.1.80 லட்சம் பணத்தைத் அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து சில வாரங்கள் கழித்து தீபக்குக்கு வனத்துறை பணி நியமன ஆணை தபால் மூலம் அனுப்பப்பட்டதாம். அதில் அரசு முத்திரை இடப்பட்டு, வனத்துறையில் தீபக்கை பணி நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் உடனடியாக வனத்துறை அலுவலகத்துக்குச் சென்று பணியில் சேர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.
Advertisement
அதை பெற்றுக்கொண்ட தீபக், நியமன ஆணையுடன் மதுரையில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு பணியில் சேர சென்றுள்ளார். அங்கு ஆணையை பரிசோதித்த வனத்துறை அதிகாரிகள் பணி நியமனம் தொடர்பாக ஆணை எதுவும் அனுப்பப்படவில்லை என்றும் தீபக் கொண்டு வந்தது போலியானது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தீபக், பணி நியமன ஆணை அனுப்பிய நபர்களின் செல்லிடப்பேசிக்கு தொடர்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக தீபக் அளித்தப் புகாரின்பேரில் உசிலம்பட்டி போலீஸார் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித், நரேஷ்குப்தா, முகேஷ்குப்தா, கன்னியாகுமரியைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, அரசுப் பணிகள் அனைத்துக்கும், தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலமாகவே பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எனவே போலி விளம்பரங்களை நம்பி இளைஞர்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றனர்.