வெட்டிவேரில் புதிய ரகத்தை அறிமுகப்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடி, அதுதொடர்பாக கடலூர் மாவட்ட விவசாயிகளுடன் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை (செப்.26) கலந்துரையாடுகிறார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆய்வறிவு மற்றும் தொழில் சார்ந்த ஆராய்ச்சி மன்றம் (சிஎஸ்ஐஆர்), கிராம முன்னேற்றத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய ரக வேளாண் விளைபொருள்களை அறிமுகப்படுத்துவது வழக்கம். அதன்படி புதிய ரக வேளாண் விளைபொருள்களை அறிமுகப்படுத்தி விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்கிறார்.
தமிழ்நாட்டில் கடலூர் அருகே உள்ள நொச்சிக்காடு கடற்கரையோர கிராமம் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கிராமத்தில் வெட்டிவேர் சாகுபடியை பாரம்பரியமாக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவசாயிகளுக்கு உத்தரப் பிரதேசத்திலிருந்து சிம்சமர்த்தி என்ற புதிய வெட்டிவேர் ரகத்தை பிரதமர் திங்கள்கிழமை அறிமுகப்படுத்துகிறார். இதுவரை சாகுபடி செய்யப்பட்டு வந்த வெட்டிவேரின் வேர்ப் பகுதியில் நார்கள் அதிக இடைவெளி விட்டும் சிறிய அளவு நீளத்துடனும் காணப்பட்டன. பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட உள்ள சிம்சமர்த்தி ரக வெட்டி வேரின் வேர்ப் பகுதி அடர்த்தியாகவும், நீளமானதாகவும், அதே நேரத்தில் அடர்ந்த வாசனையும், அதிக எண்ணெய் பசைத் தன்மை கொண்டதாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெட்டிவேர் சாகுபடியானது விவசாயிகள் அதிக லாபமீட்டும் வகையில் உதவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான விழா நொச்சிக்காடு கிராமத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளும் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் பங்கேற்கின்றனர்.
இதற்காக, ஆய்வறிவு மற்றும் தொழில் சார்ந்த ஆராய்ச்சி மன்றத்தைச் சேர்ந்த பெங்களூரு விஞ்ஞானிகள் நொச்சிக்காடு கிராமத்தில் ஏற்கெனவே முகாமிட்டுள்ளனர். அவர்கள் புதிய ரக வெட்டிவேர் ரகத்தைப் பயிரிடுவது, மகசூல் செய்வது, சந்தைப் படுத்துவது உள்ளிட்ட விவரங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
பிரதமருடன் கலந்துரையாடுவதற்காக நொச்சிகாடு கிராம விவசாயிகள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.