சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றக் கோரும் மனு தள்ளுபடி
சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றக் கோரி, தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்திருந்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றக் கோரி, தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்திருந்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை தமிழக அமைச்சர்கள் சந்திப்பதற்குத் தடை விதிக்க வேண்டும். சசிகலா, இளவரசி இருவரையும் தும்கூரில் உள்ள பெண்கள் சிறப்புச் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுப்ரோகமல் முகர்ஜி மற்றும் நீதிபதி பி.எஸ்.தினேஷ்குமார் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சட்டப்படி வழங்க வேண்டிய வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், சசிகலாவைச் சந்திப்பவர்களுக்கும் சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார்.
டிராபிக் ராமசாமி தரப்பில் வழக்குரைஞர்கள் ஷாஜி வர்கீஸ், கே.அரவிந்த் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த உயர் நீதிமன்றம், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.