அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சோதனை: விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே என் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே என் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று காலை 6 மணியளவில் சென்னையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது அறை மற்றும் புதுக்கோட்டையில் அவருக்கு சொந்தமான வீடு, குவாரிகள், கல்லூரிகள், உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், வீட்டில் இருந்து தனது மகளுடன் வெளியே வந்த விஜயபாஸ்கர், செய்தியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பேசினார்.
அப்போது வருமான வரித்துறையினரும், அதிரடிப் படையினரும் அத்துமீறி செயல்படுவதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கதறினார்.
மேலும், என் வீட்டில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை. வருமான வரித்துறையும், பாதுகாப்பு படையும் அத்துமீறி செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.
மேலும், என்னுடைய வீட்டில் இருந்து எதையும் பறிமுதல் செய்யவில்லை. எனது மகளை பள்ளிக்குக் கூட அனுப்ப விடவில்லை. மத்திய அரசின் விருதை வாங்க தில்லிக்குச் செல்வதாக இருந்தேன். தில்லிக்குச் செல்ல விடாமல் தடுத்துவிட்டனர்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்று விடுவார் என்பதால், அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாகவே எனது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று கூறினார்.