அரசு பெண்கள் காப்பகத்தில் வார்டன் மீது தாக்குதல்: 5 பெண்கள் தப்பி ஓட்டம்
கோவை அரசு பெண்கள் காப்பகத்தில் தங்கி இருந்த 5 பெண்கள் வார்டனைத் தாக்கி விட்டு சனிக்கிழமை இரவு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்
கோவை: கோவை அரசு பெண்கள் காப்பகத்தில் தங்கி இருந்த 5 பெண்கள் வார்டனைத் தாக்கி விட்டு சனிக்கிழமை இரவு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவை சங்கனூர் சாலை கணபதியில் அரசு பெண்கள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில் விபச்சார வழக்குகளில் மீட்கப்படும் பெண்கள் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் சிறையில் வைக்க முடியாத பெண்கள் இங்கு அடைக்கப்படுவது வழக்கம். இதில் நேற்று சனிக்கிழமை 9 பெண்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களைக் கண்காணிக்க வார்டன் மற்றும் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், நேற்று சனிக்கிழமை இரவு அறையில் தங்கியிருந்த 5 பெண்கள் திடீரென வார்டனைத் தாக்கி விட்டு சாவியைப் பறித்துள்ளனர். பின்னர் வார்டன் அறையில் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் 2 செல்லிடப்பேசியையும் திருடி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து துடியலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.