வெளிநாடு சென்ற கணவர் மாயம்: 18 ஆண்டுகளுக்கு பிறகு மனைவி புகார்
ஆஸ்திரேலியா நாட்டுக்கு வேலைக்கு சென்ற தனது கணவரை மீட்டு தருமாறு 18 ஆண்டுகளுக்கு பிறகு அவரது மனைவி காவல் நிலையத்தில்
திருநெல்வேலி: ஆஸ்திரேலியா நாட்டுக்கு வேலைக்கு சென்ற தனது கணவரை மீட்டு தருமாறு 18 ஆண்டுகளுக்கு பிறகு அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பாளையங்கோட்டை அருகே அன்புநகர் சித்தார்த்தர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் ஜவஹர். இவரது மனைவி கவிதா கல்பனா (47). இவர்களுக்கு கடந்த 1996 இல் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின், பொறியாளரான ராஜேஷ் ஜவஹர், தனது மனைவி கவிதாகல்பானாவை சவுதி அரேபியாவுக்கு அழைத்துச் சென்றாராம். மனைவி கர்ப்பமானதை அடுத்து அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.
கவிதா கல்பனாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க வந்த ராஜேஷ் ஜவஹர் ஆஸ்திரேலியா நாட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றாராம். அதன் பின்னர் ஒரு சில மாதங்கள் மனைவியிடம் தொலைபேசியில் பேசினாராம்.
அதன் பிறகு மனைவியை தொடர்புகொள்ளவில்லையாம்.
கணவரை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. கணவர் ராஜேஸ் ஜவஹர் எந்த நாட்டில் இருக்கிறார் என்ற விபரமும் அவருக்கு தெரியவில்லை.
இதையடுத்து, தனது கணவரை ஆஸ்திரேலியா தூதரகம் மூலம் கண்டுபிடித்து தரும்படி கோரி கவிதா கல்பனா, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.