பத்திரிக்கையாளர்களை அவமதித்த விவகாரம்: இந்திய பிரஸ் கவுன்சிலிடம் மன்னிப்பு கேட்டார் விஜயகாந்த்
சென்னை மற்றும் சேலம் ஆகிய இடங்களில் பத்திரிகையாளர்கள் அவமதிக்கும்படி நடந்து கொண்ட விவகாரங்களில்,
சென்னை: சென்னை மற்றும் சேலம் ஆகிய இடங்களில் பத்திரிகையாளர்கள் அவமதிக்கும்படி நடந்து கொண்ட விவகாரங்களில், இந்திய பிரஸ் கவுன்சிலிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருத்தம் தெரிவித்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 27.12.15 அன்று சென்னை, அடையாறு, மத்திய கைலாஷ் பகுதியில் நடந்த, அவரது கட்சியின் ரத்த தான முகாமுக்கு வந்திருந்தார். அப்பொழுது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிருபர் ஒருவர், '2016ல் அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்குமா?' என, கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஜயகாந்த், ''அ.தி.முக., ஆட்சியை பிடிக்காது. இந்த கேள்வியை ஜெயலலிதாவிடம் கேட்க முடியுமா? உங்களுக்கு அந்த தைரியம் இருக்கா?'' என கூறியவர், திடுமென, பத்திரிகையாளர்களை நோக்கி காரித் துப்பினார். இதனால், அங்கு கூடிய நிருபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதன் பின்னர் கடந்த வருடம் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக 21.04.16 அன்று சேலம் சென்ற விஜயகாந்த், அங்கு கூட்ட நெரிசலில் தன்னிடம் கேள்வி கேட்க முயன்ற பத்திரிகையாளர்களை நோக்கி மிரட்டும் தொனியில் பேசினார்.
இந்த இரண்டு சம்பவங்களின் காரணமாக அவர் மீது இந்திய பிரஸ் கவுன்சிலின் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் விஜயகாந்தின் வழக்கறிஞர் மணி, இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களிலும் பத்திரிகையாளர்களிடம் நடந்து கொண்ட முறைக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட பிரஸ் கவுன்சில் அவர் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.