அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரியில் மீண்டும் சோதனை
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரியில் இன்று மீண்டும் சோதனை செய்து வருகின்றனர் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரியில் இன்று மீண்டும் சோதனை செய்து வருகின்றனர் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள்.
அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று திங்கள்கிழமை (ஏப்.10) சுமார் நான்கரை மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் அவரை உரிய ஆவணங்களுடன் ஒரு வாரத்துக்குள் மீண்டும் ஆஜராகுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகள் மற்றும் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் ஆகியோரது வீடுகள் என 50 இடங்களில் வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டது.
இந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், உள்ளிட்டோருக்கு விசாரணைக்கு வருமாறு வருமான வரித் துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது.
இதையடுத்து விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறையின் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்கள்.
இதில் விஜயபாஸ்கர், அமைச்சருக்குரிய சுழல் விளக்கு இல்லாத காரில் அங்கு காலை 11.15 மணியளவில் வந்தார். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 கோடி குறித்தும், ரூ. 89 கோடி ஆவணம் குறித்தும் இருந்ததாகத் தெரிகிறது. இந்த கேள்விகளுக்கு சில பணபரிமாற்றத்துக்கு தன்னிடம் சட்டபூர்வமான ஆதாரங்களும், ஆவணங்களும் இருப்பதாக விஜயபாஸ்கர் கூறினாராம்.
விஜயபாஸ்கர் அளித்த பதில்களில் இருந்தும் அதிகாரிகள் மேலும் கேள்விகளை கேட்டனர். ஆனால் விஜயபாஸ்கரின் பதில்களில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு திருப்தி ஏற்படவில்லை. இதனால் சுமார் நான்கரை மணி நேர விசாரணைக்கு பின்னர், விஜயபாஸ்கரை அதிகாரிகள் விடுவித்தனர்.
மேலும் ஒரு வாரத்துக்குள் நடைபெறும் அடுத்தகட்ட விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர். அப்போது பணத்துக்குரிய ஆவணங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றுடன் வர வேண்டும் எனவும் விஜயபாஸ்கரிடம் அவர்கள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், வருமானவரித் துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் இன்று அமைச்சருக்கு சொந்தமான கல்குவாரியில் மீண்டும் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இச்சம்பவம் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.