நடிகர் தனுஷை மகன் என்று உரிமை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
நடிகர் தனுஷை மகன் என்று உரிமை கோரிய வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
நடிகர் தனுஷை மகன் என்று உரிமை கோரிய வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியர் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தங்களது மூத்த மகன் கலைச்செல்வன் தான் திரைப்பட நடிகர் தனுஷ் என்று உரிமை கோரி, மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகர் தனுஷ் மனு செய்திருந்தார். இதற்கு மேலூர் தம்பதியர் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து, நடிகர் தனுஷின் அங்க அடையாளங்கள் பரிசோதனை செய்த மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர் குழு, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மேலூர் தம்பதியர் தரப்பு வழக்குரைஞர் ஆஜராகி, நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ் போலியானது என்றார்.
அப்போது அவரை இடைமறித்த நீதிபதி, கலைச்செல்வன் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் பிறந்த தேதியும், நீங்கள் கூறும் அடையாளங்களும் தனுஷிடம் வேறுபடுகின்றனவே என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மேலூர் தம்பதியர் தரப்பு வழக்குரைஞர் பதிலளிக்கையில், நடிகர் தனுஷின் உடலிலும் அடையாளங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். இந்த சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு ஏதுவாக மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என்றார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தனுஷ் தரப்பு வழக்குரைஞர், தனுஷ் அவர்களது மகன் தான் என்பதற்கான அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.