முகப்பு
தமிழ்நாடு

ஓ.பி.எஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்: தம்பிதுரை அறிவிப்பு!

அதிமுக என்னும் கட்சி ஒற்றுமையாக இருக்க ஓ.பி.எஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று அதிமுக உறுப்பினரும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை ...

Updated On : 17 ஏப்ரல், 2017 at 6:17 PM
பகிர்:

சென்னை: அதிமுக என்னும் கட்சி ஒற்றுமையாக இருக்க ஓ.பி.எஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று அதிமுக உறுப்பினரும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை அறிவித்துள்ளார்.

முடக்கப்பட்டுள்ள அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை பெற்று தருவதாக கூறிய இடைத்தரகர் சுகேஷ் என்பவருக்கு ரூ.60 கோடி லஞ்சமாக அளித்ததாக அதிமுக  அம்மா அணியின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது தில்லி போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். நாளை அவருக்கு சம்மன் அளிக்க உள்ளனர்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகரான தம்பிதுரை தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

Advertisement

எனது தொகுதிப் பிரச்சினை குறித்து பேசுவதற்காகவே முதல்வரை சந்தித்து பேசினேன். அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்பட நிபந்தனைகள் எதுவும் இன்றி பேச்சுவார்தை நடத்த தயாராக உள்ளதாக பன்னீர்செல்வம் கூறியிருப்பதை வரவேற்கிறேன். அவர்கள் முன்வந்தால் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.

அதிமுகவைப் பொறுத்த வரை கட்சியில் பிளவு என்பதே கிடையாது. அதேபோல் தனித்தனி அணிகள் என்பதும் கிடையாது. ஜனநாயகத்துடன் செயல்படும் கட்சியில் கருத்து வேறுபாடுகள் என்பது சகஜம். அவை பேசி தீர்க்கப்படும்.

வருமானவரித்துறை சோதனை காரணமாக அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கேள்வியே கட்சியில் எழவில்லை. 

கட்சி சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டுள்ளது தற்காலிகமான ஒன்றுதான். விரைவில் சின்னம் எங்களுக்கு கிடைக்கும்.  கட்சியினர் அதற்கு கட்சியினர் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தேவையான முயற்சிகளில் ஈடுபடுவோம்.

இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.