சசிகலாவுக்கு துணையாக டிடிவி தினகரனும் சிறைக்கு செல்கிறார்: எச்.ராஜா ஆருடம்
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவுக்கு துணையாக தினகரனும் சிறைக்கு செல்வார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை: அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவுக்கு துணையாக தினகரனும் சிறைக்கு செல்வார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் கோடைகால தண்ணீர்ப்பந்தலைத் திறந்துவைத்து அவர் மேலும் பேசியது:
திராவிட இயக்கங்களின் ஆட்சியில் மணல் வளம் சுரண்டப்பட்டு தமிழகம் பாலைவனமாகிவிட்டது. இன்று தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதற்கு திராவிட இயக்கங்களின் ஆட்சியே காரணம்.
கடந்த பத்தாண்டுகளில் நீர்நிலைகளை புதுப்பிக்க வழங்கப்பட்ட ரூ. 24 ஆயிரம் கோடியை முழுவதுமாக செலவழிக்கவில்லை. மத்திய அரசாங்கம்தான் பெரும்பாலான திட்டங்களுக்கு நிதி வழங்கி வருகிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் எதிர்த்தால் அத்திட்டம் செயல்படுத்தப்படாது. மேரும் நெடுவாசல் போராட்டத்தை பயங்கரவாத இயக்கங்கள் தூண்டி விடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பார்வையாளர்களாக இருந்ததுபோதும். திராவிட இயக்கங்களை வீழ்ச்சியுறச் செய்யுங்கள். பாஜகவை ஆதரியுங்கள். அதுபோல பாஜகவினர் கோடைகால தண்ணீர்ப்பந்தலை தொடர்ந்து நடத்தி மக்களின் தாகம் தணியுங்கள் என்றார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றுள்ளார். அவருக்கு துணையாக அந்நிய செலாவணிமோசடி வழக்கில் சிக்கியுள்ள டிடிவி தினகரனும் சிறைக்கு செல்வார் என்று எச்.ராஜா கூறினார்.