ஈரோடு: விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக நடத்தும் போரட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு திண்டலில் பொது நூலகத்துறை, மாவட்ட நூலக ஆணைக்குழு, ஈரோடு மாவட்ட மத்திய மைய நூலகம் சார்பில் உலக புத்தகத் தின விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கிராமப்புற நூலகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறப்பட்டது. இந்த பற்றாக்குறையை தீர்க்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி போதிய பணியாள்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் 362 நூலகங்கள் சிறந்த நூலகங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த நூலகங்களில் ரூ.2 கோடியே 57 லட்சம் செலவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகள், குரூப் 1 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் வாங்க ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் தான் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக. நடத்தும் போரட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
ஆளும் அரசு எப்போதும் போராட்டத்துக்கு ஆதரவாக செயல்படுவதில்லை. மத்திய அரசின் விதிமுறைக்கு உட்பட்டுதான் தமிழக அரசு நடப்பது வழக்கமாக உள்ளது.
எனவே, இந்த போராட்டத்தில் நாங்கள் கலந்துகொள்ளமாட்டோம். எப்போதுமே போராட்டங்களில் அரசு பங்கேற்காது. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.