மணப்பாறை அருகே லாரி மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில் கிளினர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 15 பெண்கள் உள்பட் 25 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வையம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொச்சி அருகே உள்ள கண்டத்திபரம் பூர், பட்டாஞ்சேரி, கல்லரக்கல் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 50 பேர் சொகுசு பஸ்சில் சுற்றுலா வந்தனர்.
நாகூர் தர்கா, வேளாங்கண்ணி ஆகிய இடங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்று இரவு அவர்கள் கொச்சி திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த சொகுசு பஸ் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள சவேரியார்புரம் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2.50 மணிக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னால் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி கோதுமை லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றது. சாலையில் இடதுபுறமாக சென்ற லாரியை சொகுசு பஸ் முந்த முயன்றது.
இதில் எதிர்பாராத விதமாக லாரி மீது பஸ் உரசியது. இதில் பஸ்சின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த கொச்சியை சேர்ந்த இமானுவேல் (45) மற்றும் கிளீனர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் அந்த பஸ்சில் பயணம் செய்த கொச்சியை சேர்ந்த செலின் சேவியர் (70), அலீனா (21), பிந்து லெபின் (47), லெபின் (53), அகஸ்டின் (49), பிரசன்னா (65), லேயா (20), அசல்யா (17), சுர்ஜிதா (35), ஜோசப் (56), ஆக்னஸ் (46), ஷாஜூ (5), சாவித்திரி (47) உள்பட 15 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பஸ்ஓட்டுநர் வினோத் தலைமறைவாகி விட்டார்.
இந்த விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.