அமைச்சர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் நீக்கம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழக அரசின் இணைய தளத்தில் இருந்து அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் நீக்கப்பட்டதை சட்ட விரோதமென அறிவிக்கக்கோரி மதுரை மத்திய தொகுதி திமுக சட்டப்பேரவை
தமிழக அரசின் இணைய தளத்தில் இருந்து அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் நீக்கப்பட்டதை சட்ட விரோதமென அறிவிக்கக்கோரி மதுரை மத்திய தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, அவர் தாக்கல் செய்த பொது நல மனு விவரம்: தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான இணையதளம்
ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் ஆகும். இந்த இணையதளத்தில் ஜூலை 21-ஆம் தேதி வரை தமிழக அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்கள் மேம்படுத்தப்பட்டு இடம்பெற்றிருந்தது. ஆனால், அந்த விவரங்கள் ஜூலை22-ஆம் தேதி திடீரென நீக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் குறித்து தகவல்களை அதிகாரப்பூர்வமாக அரசு இணைய தளம் வழங்குகிறது. ஆனால், எந்தக் காரணமும் தெரிவிக்காமல் அதில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களின் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் நீக்கப்பட்டது சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும்.
இந்த விவரங்கள் நீக்கப்பட்டதால், அந்தந்தத் தொகுதிக்குட்பட்ட அமைச்சர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க முடியாமல் உள்ளது. இந்த நடவடிக்கை, பொதுநலனுக்கு எதிரானது. ஆகையால், இணையதளத்தில் நீக்கம் செய்யப்பட்ட விவரங்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு தலைமை வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.