பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார் தமிழக முதல்வர்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளாரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் புதன்கிழமை ஆசி பெற்றனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளாரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் புதன்கிழமை ஆசி பெற்றனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை மேல்மருவத்தூருக்கு வருகை தந்தார். அவரை ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் தலைவர் கோ.ப.அன்பழகன், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் கோ.ப.செந்தில்குமார் ஆகியோர் பொன்னாடை போர்த்தியும், பூச்செண்டு கொடுத்தும் வரவேற்றனர். அவருடன் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, கருப்பண்ணன், மருத்துவர் சரோஜா, ராஜலட்சுமி உள்ளிட்டோர் வந்தனர்.
பின்னர், அவர்கள் அனைவரும் கருவறையில் சிறப்பு தங்கக் கவசத்தால் அலங்கரிக்கப்பட்ட அம்மன், சுயம்பு அன்னையை வழிபட்டனர். தொடர்ந்து புற்றுமண்டபம், கன்னிக்கோயில், நாகபீடம், அதர்வனபத்ரகாளி உள்ளிட்ட சந்நிதிகளில் வழிபட்டனர். இதைத்தொடர்ந்து, பங்காரு அடிகளாரிடம் முதல்வரும், அமைச்சர்களும் ஆசி பெற்றனர். பின்னர், தனியறையில் முதல்வரும், பங்காரு அடிகளாரும் உரையாடினர். இதையடுத்து நண்பகல் 12.15 மணிக்கு அனைவரும் அங்கிருந்து புறப்பட்டனர். நண்பகல் 1 மணிக்கு வந்த அமைச்சர் துரைக்கண்ணு பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை மாலை தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றனர்.