நாடு முழுவதும் 70-ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ந் தேதி செவ்வாய்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் செயல்பட்டு வரும் பல்வேறு நட்சத்திர உணவகங்கள் இந்திய குடியரசையும், பாரம்பரியத்தையும் சுதந்திர தினத்தில் கொண்டாடும் விதமாக பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் 14 இரவு முதல் 15-ந் தேதி வரை மதுவுக்கும் தடை விதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தனியார் நட்சத்திர உணவகத்தின் மேலாளர்கள் சிலர் கூறுகையில்:
இந்த இரண்டு தினங்களிலும் இந்தியாவில் உள்ள அனைத்து வகை உணவுகளும் ஏற்பாடு செய்கிறோம். இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அனைத்து வகையான உணவுகளும் அன்று தயார் செய்யப்படும்.
தேசியக் கொடியின் நிறத்தை பிரதிபலிக்கும் வகையான உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பலருக்கு அது ஆட்சேபத்தை ஏற்படுத்தலாம், இருந்தாலும் அது எவ்வகையிலும் அவமதிக்கும் செயலாக இல்லாத வகையில் தயார் செய்யவுள்ளோம்.
இதன்மூலம் பல்வேறு கலாசாரங்களையும், பாரம்பரியங்களையும் பிரதிபலிக்கும் படி இந்த உணவுத் திருவிழா இருக்கும். சரியாக சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 14, 1947 அன்று நள்ளிரவில் பரிமாரப்பட்ட விருந்தில் இடம்பெற்ற உணவு வகைகளும் இதில் இடம்பெறும் என்றனர்.
மேலும், இந்த உணவுத் திருவிழான் போது ஒவ்வொரு உணவகங்களும் பிரத்தியேக விலைகளை நிர்ணயம் செய்துள்ளது. ரூ. 1,550 முதல் ரூ. 1,947 வரையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.