டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு பரிந்துரை: அரசுக் கொறடா ராஜேந்திரன்
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளதாக அரசின் தலைமைக் கொறடா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளதாக அரசின் தலைமைக் கொறடா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் சில நாட்களுக்குமுன்பு இணைந்தன. ஓ.பபன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், அதிமுகவின் வழிகாட்டுக் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் போர்க்குரல் எழுப்பினார். அவருக்கு ஆதரவாக 19 எம்.எல்.ஏக்கள் அணி திரண்டனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தமிழத்தின் பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவை சந்தித்து. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது நம்பிக்கை இல்லை என்றும், முதல்வரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதம் கொடுத்தனர்.
தற்பொழுது அவர்கள் அனைவரும் புதுச்சேரியினை அடுத்துள்ள சின்ன வீராம்பாளையம் என்னும் இடத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் அரசின் தலைமைக் கொறடா ராஜேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:
ஆளுனர் வித்யாசாகர் ராவை சந்தித்து. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது நம்பிக்கை இல்லை என்று அரசுக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள் கடிதம் கொடுத்துள்ளனர். இது முழுவதும் கட்சியின் நடைமுறைகளுக்கு எதிரான ஒன்றாகும். மேலும் அரசியலமைப்பின் 10-ஆவது அட்டவணைக்கும் எதிரான ஒன்றாகும்.
எனவே அவர்கள் அனைவரும் தமிழக சட்டப்பேரவை கட்சித் தாவல் தடைச்ச சட்டம் - 1986 ன் கீழ் வரும் விதி 6-ன் படி, தகுதி நீக்கத்திற்கு உரியவர்களாகின்றனர். எனவே அவர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பி உள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.