தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கேரள மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்ட சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.) மற்றும் பல் மருத்துவப் (பிடிஎஸ்) படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வை சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். பொதுப்பிரிவு மாணவர்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (ஆக.25) தொடங்கி நடைபெறுகிறது.
கலந்தாய்வில் பங்கேற்போர் தங்கள் அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவம் அல்லாத பொறியியல் உள்ளிட்ட பிற படிப்புகளில் சேர்ந்தோர் தங்கள் கல்லூரிகளில் இருந்து அத்தாட்சி சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்து.
இந்த நிலையில், மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களில் கேரளாவைச் சேர்ந்த 9 பேர் போலி இருப்பிடச் சான்றுடன் கலந்துகொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கேரளாவில் நடைபெறும் மருத்துவக் கலந்தாய்வில் இடம் கிடைப்பது கடினம் என்பதால் அவர்கள் இந்த மோசடி வேலையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனை தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உறுதிபடுத்தினார். மேலும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.