போர்க் கூட்டணி? சௌதி அரேபியா செல்கிறார் பாக். பிரதமர்!
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் சௌதி அரேபியாவுக்குச் செல்வது குறித்து...
வளைகுடா நாடுகளில் போர் நடைபெற்று வரும் சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் அரசு முறைப் பயணமாக சௌதி அரேபியாவுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, சௌதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
சௌதி அரேபியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானின் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப், ஒரு நாள் அரசு முறைப் பயணமாக வியாழக்கிழமை (மார்ச் 12) அந்நாட்டுக்குச் சென்றுள்ளார்.
சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று இந்தப் பயணத்தை பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மேற்கொண்டுள்ளதாக, பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பில், வளைகுடா நாடுகளிடையே நிலவும் பதற்றமான சூழல் குறித்தும், இருநாடுகளின் உறவுகள் குறித்தும் சௌதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் ஷரீஃப் பேச்சுவார்த்தை நடத்துவார் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2025 செப்டம்பரில், சௌதி அரேபியா மற்றும் அணு ஆயுத சக்தி கொண்ட பாகிஸ்தான் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்ததின் அடிப்படையில், இருநாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான தாக்குதல் மற்றொன்றின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.