ஆப்கனுடன் போர்ப் பதற்றம்! 6 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷியா செல்கிறார் பாக். பிரதமர்!
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் ரஷியா செல்வது குறித்து...
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையில் மோதல்கள் வெடித்துள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் அடுத்த வாரம் ரஷியாவுக்குச் செல்வதாக, பாகிஸ்தான் செனட்டின் பாதுகாப்புக் குழு தலைவர் முஷாஹித் ஹுசைன் சையத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணத்தில், மாஸ்கோ செல்லும் பிரதமர் ஷரீஃப் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை நேரில் சந்தித்து உரையாடுவார் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து ரஷிய அரசின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
Advertisement
Advertisement
ஏற்கெனவே, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் மோதல்கள் வெடித்துள்ளதால், இருநாடுகளும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமென ரஷிய அரசு வெள்ளிக்கிழமை (பிப். 27) வலியுறுத்தியுள்ளது. இதனால், இந்த விவகாரம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக பிரதமர் ஷரீஃப் மாஸ்கோ செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, 6 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2022 பிப். 24 அன்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசு முறைப் பயணமாக ரஷியா சென்றிருந்தார். அன்றுதான் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.